திருச்சி, ஏப்.5-
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு. தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் பேசினார். இதில் 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். 20 ஆண்டு காலமாக சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் தரைக்கடைகள் நடத்திவரும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள், கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மூலம் நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். வெண்டர் கமிட்டி அமைக்க வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யாமல் கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டல உதவி ஆணையர் அக்பர் அலி முன்னிலையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாநகராட்சி மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்ட வியாபாரிகளின் கடைகள் அகற்றப்படாது. அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் உரிய ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு விண்ணப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வெண்டர் கமிட்டி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.