அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் தொழிலாளர்கள் சங்கத்தினர் பஸ்களை இயக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று பல்வேறு சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மொத்தம் உள்ள 71 பஸ்களில் 10 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மீதமுள்ள 61 பஸ்கள் இயங்காமல் போக்குவரத்து கழக பணிமனையின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டன. தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். .
போலீசார் குவிப்பு
மேலும் பஸ்களை இயக்க வரும் அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களையும் பஸ்களை இயக்க விடாமல் தொ.மு.ச. உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ்சின் முன்பு அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பஸ்கள் இயங்கவில்லை. தனியார் பஸ்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கின. அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள், பணிக்கு செல்வோர், மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். பள்ளி மாணவர்கள் பஸ்கள் கிடைக்காமல் தனியார் பஸ்களில் படியில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.