மாவட்ட செய்திகள்

மார்ச் 21-ந்தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை ஒருங்கிணைத்து உண்ணாவிரதப் போராட்டம்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து அடுத்த மாதம் (மார்ச்) 21-ந்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொடி ஏற்றினார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரின் உத்தரவுகளை, திண்டுக்கல் மேலாளர் சரிவர பின்பற்றுவதில்லை. அவர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். இனிவரும் காலங்களிலும் அவர் அவ்வாறு செயல்பட்டால் மேலாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும். சென்னையில் கடந்த சில நாட்களாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால், ஜாக்டோ-ஜியோ, ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து அடுத்த மாதம் (மார்ச்) 21-ந்தேதி 5 மண்டலங்களின் சார்பாக மாபெரும் உண்ணாவிர போராட்டம் நடத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும்.

ஒப்பந்த பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதை தவிர்த்து, நிரந்தர ஊழியர்களை பணி அமர்த்த வேண்டும்.

பத்திரப்பதிவு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட 590 பணியாளர்களுக்கு கடந்த 1 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும். அரசு வருவாயை அதிகரிக்கும் காரணிகளை கண்டறிய, தனிக்குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.