தூத்துக்குடியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேற்று காலை பள்ளி வாகனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சுற்றுலா சென்றனர். நாள் முழுவதும் பல்வேறு இடங்களைப் பார்வையிட்ட மாணவர்கள், மாலையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தூத்துக்குடி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பள்ளி வாகனம் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் புறவழிச்சாலை பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்த ஒரு மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த மாணவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், உயிரிழந்த மாணவர் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டியைச் சேர்ந்த நரேன்குமார் (வயது 15) என்பது தெரியவந்தது. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வள்ளியூர் காவல் நிலைய போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவன் உயிரிழந்த தகவல் கிடைத்ததும், பள்ளி நிர்வாகிகள் உடனடியாக வள்ளியூருக்கு விரைந்தனர். மகிழ்ச்சியாகச் சென்ற கல்விச் சுற்றுலா, மாணவனின் உயிரிழப்பில் முடிந்திருப்பது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.