மாவட்ட செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

போடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

போடி,

தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரம் பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 52). இவர் போடி நகர் போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16-ந் தேதி இரவுப்பணிக்கு பாலசுப்பிரமணி சென்று விட்டார். வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகள் தூங்கி கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் காலையில் பாலசுப்பிரமணி பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக் கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டுக் குள் சென்று பார்த்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலசுப்பிரமணி போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.