பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகியவற்றின் மூலம் சென்று வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் வழியில் அமர்ந்து தாங்கள் கொண்டு வரும் உணவை சாப்பிடுவது வழக்கம். அப்போது மீதமாகும் உணவுகளை மலைப்பகுதியில் வசிக்கும் குரங்கள் தின்று வந்தன.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பழனி மலைப்பகுதியில் வசிக்கும் குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றன. இதையடுத்து அவை உணவு தேடி அடிவாரம் மற்றும் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த குரங்குகளின் அச்சுறுத்தலால் நகர் பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே ஊருக்குள் புகுந்த குரங்குகளை பிடிக்கவும், அதற்கு உணவு வழங்கவும் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.