மாவட்ட செய்திகள்

தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

திருச்சி:

கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாநகரில் பஸ்களில் சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில் பஸ் நிலையம் மற்றும் பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் தனியார் பஸ்களின் உரிமையாளர்களுடன் கமிஷனர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கமிஷனர் காத்திகேயன் பேசியதாவது:-

பஸ்களில் குற்ற சம்பவங்கள்

தனியார் பஸ்களில் திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குடிபோதையில் பஸ் டிரைவர், கண்டக்டர், பொதுமக்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்களில் எதிரிகளை எளிதில் அடையாளம் காணவும் கண்காணிப்பு கேமரா பயனுள்ளதாக இருக்கும். ஆகவே பஸ்களில் கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக பொருத்த வேண்டும்.

மேலும் தனியார் பஸ் டிரைவர்கள் அபாயகரமாக பஸ்சை ஓட்டுவதை தவிர்க்க அறிவுரை அளிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறைக்கும், பஸ்களின் உரிமையாளர்களுக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. சட்டத்தை மதிக்காமல் செயல்படுவோர் மீது சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கேமரா பொருத்த முன்னுரிமை

இதையடுத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்சில் கண்காணிப்பு கேமரா பொருத்த முன்னுரிமை கொடுத்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிகளின் புகைப்படத்தை கண்டக்டரிடம் கொடுத்து குற்றம் நடைபெறாத வகையில் பார்த்து கொள்வதாகவும் தெரிவித்தனர். கூட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.