மாவட்ட செய்திகள்

கோவை போலீசார் மீண்டும் சோதனை

ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் கோவை போலீசார் சோதனை நடத்தினர்.

ஆலங்குடி, ஜூலை.22-
ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் கோவை போலீசார் சோதனை நடத்தினர்.
மோசடி புகார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர் செல்வம். இவர் கோவையை சேர்ந்த மருத்துவர் மாதேஸ்வரனிடம் கடன் வாங்கி தருவதாக ரூ.2 கோடியே 85 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் ஏற்கனவே சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சோதனை
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பன்னீர்செல்வத்தை கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் ஆலங்குடிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சோதனையிட்டனர்.
மேலும் சோதனை செய்யப்பட்ட ஒவ்வொரு இடங்களுக்கும் போலீசார் பன்னீர் செல்வத்தை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.