கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது சிந்தகும்மனப்பள்ளி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பத்தியம்மா. இவர் சொந்தமாக 10 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் இவர் காலையில் ஆடுகளை மேய்க்க கொண்டு சென்று மீண்டும் மாலை வீட்டிற்கு அழைத்து வந்து பட்டியில் அடைப்பது வழக்கம்.
அதே போல நேற்று காலை அவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்றார். மாலை 5.30 மணி அளவில் திடீரென்று வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பத்தியம்மா தனது ஆடுகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
10 ஆடுகள் செத்தன
அப்போது அப்பகுதியில் மின்கம்பி அறுந்து கிடந்தது. அதை மிதித்த ஆடுகளை மின்சாரம் தாக்கியது. இதில் 10 ஆடுகளும் அதே இடத்தில் துடிதுடித்து செத்தன. நல்ல வேளையாக பத்தியம்மா சற்று தொலைவில் வந்து கொண்டிருந்ததால் அவர் உயிர் பிழைத்தார். தனது கண் முன்பே 10 ஆடுகளும் மின்சாரம் தாக்கி செத்ததை கண்ட பத்தியம்மா கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
பத்தியம்மா ஆடுகளை வளர்த்து பிழைப்பை நடத்தி கொண்டிருந்தார். தற்போது அனைத்து ஆடுகளும் செத்து விட்டதால் அவர் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார். அவருக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.