மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சேந்தமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் ஹரிகரன் (வயது 28). திருமணமான இவர் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திருக்கழுக்குன்றம் பகுதியில் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அந்த மோட்டார் சைக்கிளில் அவரது உறவினர்களான சகோதரர்கள் திவாகர் (16) மற்றும் நித்திஷ் (14) ஆகியோரும் பயணம் செய்தனர். செங்கல்பட்டை கடந்து புல்லேரி கிராமம் வந்தபோது எதிரே திருக்கழுக்குன்றத்தை அடுத்த புலிக்குன்றம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரேம்குமார் (25) மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். 2 மோட்டார் சைக்கிள் களும் வேகமாக மோதின.

இதில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் எரிந்து சேதம் அடைந்தன. இதில் படுகாயம் அடைந்த ஹரிகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த திவாகர், நித்திஷ் இருவரும் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் விசாரித்து வருகிறார்.