மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து திருப்பூருக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வாகன பிரசார பயணம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கன்னியாகுமரியில் இருந்து திருப்பூருக்கு வாகன பிரசார பயணத்தை தொடங்கினர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், இந்தியாவை காப்போம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருப்பூருக்கு வாகன பிரசார பயணம் ஏற்பாடு செய்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து பிரசார பயணம் தொடங்க இருந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் காந்தி மண்டபம் முன்பு கூடினர்.

அப்போது அங்கு வந்த கன்னியாகுமரி போலீசார் காந்தி மண்டபம் முன்பு இருந்து பிரசாரம் தொடங்க அனுமதி இல்லை என்றும், பழைய பஸ் நிலையம் முன்பு இருந்துதான் பயணத்தை தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் பிரசார பயண தொடக்க விழா கன்னியாகுமரி பஸ் நிலையம் பகுதிக்கு மாற்றப்பட்டது.

பிரசார பயணம் தொடக்க விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். ஸ்ரீகுமார், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் வீரபாண்டியன் தொடங்கி வைத்தார். பிரசார பயணம் தொடங்கியதும் அதில் பங்கேற்றவர்கள் நடந்து சென்றனர். இதற்கு கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரசார பயணத்தில் கலந்து கொள்பவர்கள் வாகனத்தில் செல்வதாக மட்டுமே அனுமதி பெற்றுள்ளனர், எனவே தொண்டர்கள் நடந்து செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி தடை விதித்தனர். இதனால் மீண்டும் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.இதையடுத்து மூத்த நிர்வாகிகள் தலையிட்டு சமரசம் செய்தனர். அதன்பின்பு பிரசார வாகன பயணம் புறப்பட்டு சென்றது.