மாவட்ட செய்திகள்

இறுதிகட்ட மலர் செடிகள் நடும் பணி

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இறுதிகட்ட மலர் செடிகள் நடும் பணி தொடங்கியது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விமரிசையாக நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலர் கண்காட்சி நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் வருகிற மே மாதம் 3-வது வாரத்தில் மலர் கண்காட்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் 2 கட்டங்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இறுதி கட்டமாக மலர் செடிகள் நடவு பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாண்டியராஜ், பூங்கா மேலாளர் சிவபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மேரி கோல்டு, சால்வியா, பேன்சி கேலண்டுலா, டயான்தஸ் உள்ளிட்ட 50 ஆயிரம் வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணி இன்னும் ஒரு வார காலத்தில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடவு செய்யப்படும் மலர் செடிகள் வருகிற ஏப்ரல் மாதத்தில் பூக்கத் தொடங்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லட்சக்கணக்கில் மலர்கள் அதிக அளவில் பூக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.