மாவட்ட செய்திகள்

இளங்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் ‘பறவை' அமைப்பு

சென்னை சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 18 வயது முதல், 24 வயது வரையிலான, முதல் முதலாக சிறிய வழக்குகளில் சிக்கிய இளங்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு மறு வாழ்வு அமைத்து கொடுப்பதற்காக ‘பறவை' என்ற அமைப்பு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ், சிறைத்துறை, சமூகநல பாதுகாப்புத்துறை, மாநில சட்டஉதவி குழு மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து இந்த பறவை' அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பின் தொடக்க விழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த அமைப்பை முறைப்படி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்து பேசினார்கள். நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசும்போது, நாட்டில் 20 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை, அதுபோல இந்த 18-வயது முதல், 24 வயது வரையிலான விசாரணை கைதிகள் மீண்டும் குற்றம் செய்யாமல், அவர்களை நல்வழிப்படுத்தி காப்பாற்ற வேண்டியது நமது கடமை, அதற்காகத்தான் இந்த பறவை' அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், சமூகநலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் வளர்மதி, சிறைத்துறை இயக்குனர் சுனில்குமார் சிங் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.