மாவட்ட செய்திகள்

தோவாளை இரட்டைக்கொலை, சரண் அடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு

தோவாளை இரட்டை கொலை வழக்கில் சரணடைந்த 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் அருகே தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன்(வயது 55), பூவியாபாரி. இவருடைய மனைவி கல்யாணி(40). இவர்களுக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார்.

கடந்த 31-ந்தேதி இரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பலால் முத்துவும், கல்யாணியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்யாணிக்கும் அவருடைய அண்ணன் சுடலையாண்டிக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுடலையாண்டி கூலிப்படையை ஏவி கல்யாணி, முத்து ஆகிய 2 பேரையும் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோட்டார் பஜனை மாடத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(26) என்பவரையும், சுடலையாண்டியின் கள்ளக்காதலியான கோகில வள்ளி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சுடலையாண்டி சென்னை தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். கூலிப்படையை சேர்ந்த சகாயசாஜூ ஜெனிஸ்(24), ராஜ்குமார்(32), ராஜா(35), அய்யப்பன்(25) ஆகியோர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதற்கிடையே ஆரல்வாய்மொழி போலீசார் சரண் அடைந்த 5 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்தனர்.

அதைதொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரணியல் கோர்ட்டுக்கு அழைத்து சென்று ஆஜர் படுத்தினர். அங்கு விசாரித்த மாஜிஸ்திரேட்டு இந்த மனுவை நாளை(இன்று) விசாரிப்பதாக கூறி ஒத்தி வைத்தார். அதைதொடர்ந்து போலீசார் 5 பேரையும் மீண்டும் பாளையங்கோட்டைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.