மாவட்ட செய்திகள்

செம்மஞ்சேரி பகுதியில் மழை வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதி

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

செம்மஞ்சேரி ஜவஹர் நகர், எழில்முக நகர், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் அங்கு இருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படகு போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை விட்டு 3 நாட்களாகியும் அந்த பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் வடியாததால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அதிகாரிகள் மழைநீரை விரைந்து வெளியேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.