கிருஷ்ணராயபுரம்,
வியாபாரிகள் சங்கத்தினர் மனு
லாலாபேட்டை ரெயில்வே நிலைய அதிகாரியிடம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:-
சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரெயில் எண்கள் 56110, 56842, 56841, 56109 ஆகிய 4 பயணிகள் ரெயில்கள் திருச்சியில் இருந்து ஈரோடு மார்க்கமாக நாள்தோறும் சென்று வந்தன. இந்த ரெயில்கள் மூலம் லாலாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் பயன் அடைந்து வந்தனர்.
கொரோனாவால் நிறுத்தம்
இந்தநிலையில் கொரானா காலகட்டத்தில் மேற்கண்ட 4 பயணிகள் ரெயில்களும் நிறுத்தப்பட்டன. தற்போது நாடு முழுவதும் கொரோனா குறைந்து வந்த நிலையில் நிறுத்தப்பட்டு அனைத்து ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சேலம் கோட்டத்துக்குட்பட்ட மேற்கண்ட 4 ரெயில்களும் இதுவரை இயக்கப்படாமல் காலம் தாழ்த்தி வருவதாக ரெயில் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் லாலாபேட்டை, பிள்ளாபாளையம், சிந்தலவாடி, மகிளிபட்டி, மத்திப்பட்டி, பாலப்பட்டி, வேங்காம்பட்டி, கொம்பாடிபட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து செல்லும் பொதுமக்கள் இந்த ரெயிலைத்தான் பயன்படுத்தி வந்தனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் பயணம் செய்ய முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ரெயில்களை இயக்க கோரிக்கை
எனவே பயணிகள் நலன் கருதி மேற்கண்ட 4 ரெயில்களையும் உடனடியாக இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்களை இயக்காவிட்டால் வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பாக ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.