பெங்களூரு

முருக மடாதிபதி மீதான வழக்கு விசாரணை சட்டப்படி நடைபெறும்; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

பாலியல் புகாரில் சிக்கிய முருக மடாதிபதி மீதான வழக்கு விசாரணை சட்டப்படி நடைபெறும் என போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.

பெங்களூரு:

சித்ரதுர்கா முருக மடாதிபதி சிவமூர்த்தி சரணரு மீது அதே மடத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் 2 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சித்ரதுர்கா போலீசார் மடாதிபதியை கைது செய்துள்ளனர். மிக முக்கியமான மடங்களில் ஒன்றான முருக மடத்தின் மடாதிபதியை கைது செய்திருப்பது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முருக மடாதிபதி சிவமூர்த்தி சரணருவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் சட்டப்படி விசாரணை நடக்கிறது. இதில் எக்காரணம் கொண்டும் அரசு தலையிடாது. அவரிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.