மாவட்ட செய்திகள்

திருமணத்துக்கு வற்புறுத்திய விதவை பெண் கொன்று புதைப்பு கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது

திருமணத்துக்கு வற்புறுத்திய விதவை பெண்ணை கொன்று புதைத்த கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை மான்கூர்டு ஜோதிலிங் நகரை சேர்ந்த விதவை பெண் ரோகிணி(வயது28). இவர் நவிமும்பை வாஷியில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ரோகிணியின் சகோதரர் ராஜேந்திரா மான்கூர்டு போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே காணாமல் போன ரோகிணியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், அதே ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வந்த சுனில் சிர்கே(44) என்பவர் தான் பணம் எடுத்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

ரோகிணிக்கும், சுனில் சிர்கேவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்தநிலையில் ரோகிணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுனில் சிர்கேவை வற்புறுத்தி வந்தார். ஆனால் சுனில் சிர்கே அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ரோகிணி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த சுனில் சிர்கே அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதற்காக சம்பவத்தன்று ரோகிணியை சுற்றுலா செல்லலாம் வா எனக்கூறி, சத்தாராவில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு தனது கூட்டாளிகளான நவிமும்பை மாநகராட்சி பஸ் டிரைவர் விஜய் சிங், மற்றொரு டிரைவர் ராமச்சந்திரா ஜாதவ் ஆகியோரை வரவழைத்து உள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து ரோகிணியை மம்பட்டியால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையின் போது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுனில் சிர்கே, ராமச்சந்திரா ஜாதவ், விஜய்சிங் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் சத்தாரா சென்று புதைக்கப்பட்ட ரோகிணியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.