மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

மனைவி கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் சன்னதி தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 51). இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி தொழில் செய்து வந்தார். இவருக்கு உமாமகேஸ்வரி (48) என்ற மனைவியும், ஜீவிதா என்ற மகளும், ஹேமந் ராம் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கம் கொண்ட குமரேசன் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அவரது மனைவி, ஏன் இவ்வாறு மது குடித்து உடலை கெடுத்து கொள்கிறீர்கள் என்று தகராறில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் மது குடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்த குமரேசன் தான் ஏற்கனவே வாங்கி வந்த மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.

இதை பார்த்த அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து உமாமகேஸ்வரி புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.