மாவட்ட செய்திகள்

காசிமேட்டில் கணவரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலன் இன்றி சாவு

காசிமேட்டில் வரதட்சணை கேட்டு கணவரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு திடீர் நகர் பகுதியை சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ்(வயது 30). இவரது மனைவி லட்சுமி(25). இவர்களுக்கு இலக்கியன் என்ற மகனும், ஓவியா என்ற மகளும் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான கோவிந்தராஜ் குடிபோதையில் மனைவியிடம் நகைபணம் வரதட்சணையாக கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த கோவிந்தராஜ் குளிர்பானத்தில் மதுவை கலக்கி கட்டாயப்படுத்தி மனைவியை குடிக்க வைத்துள்ளார். பின்னர் அவரை இரும்பு கம்பியால் பலமாக தாக்கினார்.

இதில் தலையிலும், உடலிலும் பலத்த காயம் ஏற்பட்ட லட்சுமி சுய நினைவு இல்லாமல் வீட்டில் மயங்கி கிடந்தார். லட்சுமி மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் லட்சுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து லட்சுமியின் தந்தை ஆறுமுகம் இதுபற்றி காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பின்னர் போலீசார் அங்கு சென்று லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.