மாவட்ட செய்திகள்

முக்காணி கோவிலில் அம்மன் நகைகள் திருட்டு

முக்காணியில் பிரசித்திபெற்ற ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பொட்டுத்தாலி, வெள்ளித்தோடு ஆகிய அம்மன் நகைகளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆறுமுகநேரி:

முக்காணியில் பிரசித்திபெற்ற ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பொட்டுத்தாலி, வெள்ளித்தோடு ஆகிய அம்மன் நகைகளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

பழமையான கோவில்

ஆத்தூரை அடுத்துள்ள முக்காணியில் பழமையான ஆதி பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் கொடைவிழா பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக இங்கு கொடை விழாவை முன்னிட்டு அமைக்கப்படும் பந்தலை சுற்றுவட்டார பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்து செல்வார்கள். அந்த அளவிற்கு அனைவரையும் கவரக்கூடிய அளவில் பெரிதாகவும் கலைஅம்சத்தோடும் அமைந்திருக்கும். கோவில் பூசாரி முக்காணிய சேர்ந்த சண்முகம் தினமும் காலை, மாலையில் கோவிலின் கருவறை வரை சென்று துப்பரவு செய்து பூஜை நடத்துவது வழக்கம்.

நகை திருட்டு

வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலையில் கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலை திறந்து கருவறையை திறந்து சுத்தம் செய்துவிட்டு பூஜைக்கு ஏற்பாடு சய்தபோது, ஆதி பரமேஸ்வரி அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்திலான பொட்டுத்தாலி (நான்கு) இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

மேலும் அம்மனின் காதில் கிடந்த வெள்ளி தோடுகளும் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் கோவில் நிர்வாகியிடம் தகவல் தெரிவித்துள்ளார். கோவிலில் மர்ம நபர் அம்மன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகி பரமசிவம் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதன் பேரில் முக்காணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் அம்மன் நகைகளை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.