கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் அழகு நிலைய பெண் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
அழகுநிலைய உரிமையாளர்
கிருஷ்ணகிரி சேலம் சாலையில் வசித்து வருபவர் நதியா (வயது 33). இவர், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். இவரது கடையில் தர்மபுரி பழைய ரெயில்வே சாலை பகுதிகளில் வசித்து வரும் பாண்டியன் மனைவி பவானி (25) வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி, பவானி, நதியாவிடம் வீட்டின் சாவியை வாங்கி கொண்டு சமைத்து வைப்பதாக கூறியுள்ளார். இதனால் நதியா தனது வீட்டு சாவியை பவானியிடம் கொடுத்தார். சாவியை வாங்கி கொண்ட பவானி, தனது கணவர் பாண்டியனுடன் நதியா வீட்டிற்கு சென்றார்.
கணவன்-மனைவி கைது
பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். மாலை வீட்டுக்கு சென்ற நதியா பீரோவில் வைத்திருந்த நகை, பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பவானி தனது கணவருடன் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பவானி, அவருடைய கணவர் பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை போலீசார் மீட்டார்.