மாவட்ட செய்திகள்

கெலமங்கலம் அருகே விவசாயி வீட்டில் 13½ பவுன் நகை பணம் திருட்டு

கெலமங்கலம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 13½ பவுன் நகை பணம் திருட்டு போனது.

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, பணம் திருட்டு போனது.

நகை, பணம் திருட்டு

கெலமங்கலம் அருகே உள்ள பேரகப்பள்ளியை சேர்ந்தவர் சுனந்தம்மா (வயது 53). விவசாயி. சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்றார். இரவு அவர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கினார். மறுநாள் காலை சுனந்தம்மா வீட்டுக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் உள்ளே வைத்திருந்த 13 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

அப்போது வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.