திருவாரூர்,
பேரணி
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் மற்றும் அனைத்து சேவை அமைப்புகள் சார்பில் பேரணி நேற்று நடந்தது. திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பேரணி தெற்கு வீதி, நேதாஜி ரோடு, கடைவீதி வழியாக பஸ்நிலையத்தை வந்து அடைந்தது. அதனை தொடர்ந்து அங்கு வர்த்தக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சங்க பொதுச்செயலாளர் குமரேசன், துணை தலைவர்கள் தங்கதுரை, ஆனந்த், பொருளாளர் சாதிக்பாட்சா, செயலாளர்கள் முகமதுபாரூக், சித்திவிநாயகம், உதயகுமார், அமைப்புகளின் நிர்வாகிகள் வரதராஜன், சக்திசெல்வகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.