மாவட்ட செய்திகள்

பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 தொழிலாளர்கள் கைது

பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொபட் மற்றும் டி.வி.யை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள அழகிநாச்சியம்மன் கோவில் அருகே நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமயிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் முன்னுக்கும், பின்னும் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் மேலைச்சிவபுரியை சேர்ந்த மணி (வயது 24), பட்டுக்கோட்டையை சேர்ந்த மணிக்குமார் (20) என்பதும், சம்பவத்தன்று பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி நல்லான்செட்டியார் வீதியைச்சேர்ந்த வள்ளியப்பன் செட்டியார் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த எல்.இ.டி., டி.வி. மற்றும் வீட்டின் முன்பு இருந்த மொபட்டை திருடியதும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த அருண்குமார்(19) உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர்களிட மிருந்து மொபட் மற்றும் டி.வி.யை போலீசார் கைப்பற்றினர்.

ஆவூர் அருகே உள்ள ஆலங்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி விஜயலெட்சுமி ( வயது 42). சுப்பிரமணியன் இறந்து விட்டதால் விஜயலெட்சுமி தனது இளையமகனுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை இளையமகன் வேலைக்கு சென்றுவிட்டார். விஜயலெட்சுமி வீட்டை பூட்டி விட்டு திருச்சி கருமண்டபத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து கதவைத் திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து வீட்டின் உள்அறையில் இருந்த பீரோவை பார்த்தபோது, அதில் இருந்து பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் அவர் வைத்திருந்த 3 பவுன் தங்கசங்கிலி, ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மண்டையூர் போலீஸ் நிலையத்தில் விஜயலெட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.