மாவட்ட செய்திகள்

வாட்ஸ்-அப் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்த வாலிபர் சிக்கினார்

வாட்ஸ்-அப் மூலம் கல்லூரி மாணவர்களிடம் ஆர்டர் பெற்று கஞ்சா விற்று வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை வில்லேபார்லேவில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு போதைப்பொருள் வினியோகம் நடந்து வருவதாக போதைத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் போலீசார் நவின்சந்த் போபட்லால் கப்பாடியா வித்யா மந்திர் அருகே தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் அந்த பகுதியில் நடமாடியதை போலீசார் கண்டனர். உடனே அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அந்த வாலிபர் அப்பகுதியில் பயிலும் கல்லூரி மாணவர்களின் வாட்ஸ்-அப் நம்பர் மூலம் ஆர்டர் பெற்று கொண்டு அவர்களுக்கு கஞ்சா வினியோகித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர், சாந்தாகுருசை சேர்ந்த சுனில் தாஸ் (வயது29) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.