தேர்தல் 2026

தமிழ்நாடு முழுவதும் களத்தில் இறங்கும் 186 இளம் பேச்சாளர்கள் - உதயநிதி ஸ்டாலின்

தெருமுனைக்கூட்டங்கள் வழியாக, தேர்தல் பரப்புரையை முன்னெடுக்கப்போகிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

என் உயிரினும் மேலான கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி வகுப்புகள், காணொலிக் கலந்துரையாடல்கள் மூலம் பட்டை தீட்டப்பட்ட நம் இளம் பேச்சாளர்கள் தொடர்ந்து கழகப் பொதுக்கூட்டங்களில் மிகச்சிறப்பாக உரையாற்றி வருகிறார்கள். அவர்களின் ஆற்றலை முழுமையாக கழகம் பயன்படுத்தும் நேரம் இது.

தமிழ்நாடு முழுவதும் 186 இளம் பேச்சாளர்கள், தெருமுனைக்கூட்டங்கள் வழியாக, தேர்தல் பரப்புரையை முன்னெடுக்கப்போகிறார்கள்.

ஐந்தாண்டுக்கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், திராவிட மாடல் அரசு தொடர வேண்டியதன் அவசியம், பாசிச பா.ஜ.க. – அடிமை அ.தி.மு.க. கூட்டணி, தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகங்கள் ஆகியவற்றை, மக்களிடம் எடுத்துரைத்து கழகம் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற, பரப்புரையைத் தொடங்கும் இளம் பேச்சாளர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

தமிழ்நாடு முழுவதும் கழக நிர்வாகிகள் ஆற்றல்மிக்க இந்த இளம் பேச்சாளர்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.