நீலகிரி,
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து விட்டு, மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் அ.தி.மு.க. வேட்பாளர் சாந்தி ராமு, தேநீர் கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சாந்தி ராமு, குன்னூரில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அப்போது, அவருக்கு பரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சாந்தி ராமு, பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தேநீர் கடையில் டீ குடித்தபடியே பொதுமக்களிடம் தனக்கு வாக்கு செலுத்துமாறு கேட்டுக் கொண்ட சாந்தி ராமு, கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து ஆதரவு திரட்டினார்.