தேர்தல் 2026

புதுச்சேரியில் ‘ரோடு ஷோ’ நடத்திய பிரதமர் மோடி - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி வாகனத்தின் மேல் நின்றபடி பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.

புதுச்சேரி விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை முதல்-மந்திரி ரங்கசாமி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் அஜந்தா சிக்னல் சந்திப்புக்கு சென்ற பிரதமர் மோடி, திறந்த வாகனத்தில் ஏறி 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற்றது. இதில் வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி வாகனத்தின் மேல் நின்றபடி பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அங்கு டிரோன்கள் விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பிரசாரத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி இன்று இரவே ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.