சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த (2021) சட்டசபை தேர்தலில் 0.43 சதவீத வாக்குகளே பெற்ற தே.மு.தி.க.வுக்கு எங்களைவிட அதிக தொகுதிகளா என்று கூட்டணி கட்சியினர் ஒரு பக்கம் தி.மு.க. மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்று அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை அறிவாலயத்துக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்து, தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 10 தொகுதிகளுக்கான பட்டியலை அவர் டி.ஆர்.பாலுவிடம் வழங்கினார். ஆனால், தே.மு.தி.க. பட்டியலில் உள்ள விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளை கொடுக்க தி.மு.க. பேச்சுவார்த்தை குழு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட திட்டமிட்டு இருப்பதுடன் விருகம்பாக்கம் தொகுதியை பார்த்தசாரதிக்கு கேட்டுப்பெறவும் முடிவு செய்திருந்தார். இதே விருகம்பாக்கம் தொகுதியில் 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பார்த்தசாரதி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆனால், தி.மு.க. மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் இன்று மாலை வருவதாக கூறிவிட்டு பிரேமலதா விஜயகாந்த் சோகமாக அண்ணா அறிவாலயத்தைவிட்டு திரும்பிச் சென்றார்.