மாவட்ட செய்திகள்

அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் கொய்யா உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கொய்யா உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

விவசாயம் பாதிப்பு


பழனி தாலுகா பழைய ஆயக்குடியில் உள்ள கொய்யா உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் செல்வம் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய்க்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடி, ஆயக்குடி உள்ளிட்ட கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் கொய்யா, எலுமிச்சை, மா, சப்போட்டா போன்றவை பயிரிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்து போனதால், இந்த ஆண்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் இல்லாமல் பழ மரங்கள் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.25 ஆயிரம் நிவாரணம்


பழனி பகுதி மட்டுமின்றி நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, கொடைரோடு ஆகிய பகுதிகளில் திராட்சை, பல்வேறு வகையான பூக்கள் பயிரிட்ட விவசாயிகளும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத்தையே நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு, வருடத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பழனி தாலுகாவில் உள்ள சாலைகள் அனைத்தும், நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.