மும்பை,
வில்லேபார்லேயில், போலீஸ்காரருக்கு ரூ.300 லஞ்சம் கொடுத்த வடபாவ் வியாபாரியை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
போலீஸ்காரருக்கு லஞ்சம்
மும்பை வில்லேபார்லே கிழக்கு பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் அந்த பகுதியில் சட்டவிரோதமாக வடபாவ் வியாபாரம் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அண்மையில் அங்கு வந்த ஒரு போலீஸ்காரருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
இதுபற்றி அந்த போலீஸ்காரர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து வடபாவ் வியாபாரி மோகன்தாசை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
வடபாவ் வியாபாரி கைது
இதற்காக அந்த போலீஸ்காரரை சம்பவத்தன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மோகன்தாசின் கடைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மோகன்தாஸ் கடையை அங்கிருந்து அகற்றாமல் தொடர்ந்து வியாபாரம் செய்வதற்காக போலீஸ்காரருக்கு ரூ.300 லஞ்சமாக கொடுத்து உள்ளார்.
அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வடபாவ் வியாபாரியை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள மோகன்தாஸ் கடந்த 2016-ம் ஆண்டு உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.