மாவட்ட செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி அரசு சார்பில் வழங்கப்பட்டது

மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் மாதா நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது 6 வயது மகள் ஹாசினி.

பூந்தமல்லி,

கடந்த 5ந் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனாள். பின்னர் 2 நாட்கள் கழித்து ஹாசினியை அனகாபுத்தூர் மேம்பாலம் அருகே எரிந்த நிலையில் பிணமாக மாங்காடு போலீசார் மீட்டனர். விசாரணையில் சிறுமி ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் (வயது 24) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து படுகொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே தமிழக அரசின் சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண தொகை சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஆலந்தூர் தாசில்தார் ராணி சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு சென்று அவரது தாயார் ஸ்ரீதேவியிடம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.