மாவட்ட செய்திகள்

பெண் தொழில் அதிபரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் போல மிரட்டி ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

பெண் தொழில் அதிபரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் போல மிரட்டி ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்த பெண் தொழில் அதிபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் தாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் எனவும், பெண் தொழில் அதிபர் நடத்தி வரும் தொழிலில் முறைகேடு நடப்பதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.10 லட்சம் தரவேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பெண் தொழில் அதிபர் ரூ.5 லட்சம் தருவதாக கூறினார். இதன்பின்னர் அவர் மிரட்டல் தொடர்பாக சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறிக்க முயன்றவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

சம்பவத்தன்று போலீசாரின் யோசனைப்படி பெண் தொழில் அதிபர் மும்பை விமான நிலைய வளாகத்தில் ரூ.5 லட்சத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் பெண் தொழில் அதிபரை சந்தித்து பணத்தை பெற முயன்றனர். இதில் மறைந்து இருந்த போலீசார் விரைந்து சென்று 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் அமித் குமார் சிங் மற்றும் சிவான்சு சர்மா என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த முகமது இர்சாத் அன்சாரி என்பவரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.