மாவட்ட செய்திகள்

வேலூர் மீன் மார்க்கெட்டில் முககவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.10,500 அபராதம்

வேலூர் மீன் மார்க்கெட்டில் முககவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூர்,

வேலூர் மக்கான் அருகே உள்ள புதிய மீன் மார்க்கெட் நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். மார்க்கெட்டில் வியாபாரம் செய்த வியாபாரிகள் பலர் முககவசம் அணியாமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மீன் மார்க்கெட்டுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரு கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் பலர் நின்று கொண்டிருந்தனர். அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அப்போது முககவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.3,500 அபராதம் விதித்தார். இதுதவிர மார்க்கெட்டில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். இதுபோன்று தொடர்ந்து முககவசம் அணியாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.