மாவட்ட செய்திகள்

திருச்சி: கலெக்டர் அலுவலகம் முன்பு எலியை கவ்விக்கொண்டு விவசாயிகள் போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த சென்றனர்.

அப்போது விவசாயிகள் மீது நாக்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்தனர். இதனை கண்டித்தும், விவசாயிகள் மீது வழக்குப்பதிந்தது குறித்து பிரதமர் மோடிக்கு மாவட்ட கலெக்டர் மனு மூலமாக தெரியப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எலியை வாயில் கவ்விக் கொண்டும், சட்டை அணியாமல் நெற்றியில் பட்டை போட்டு அரைநிர்வாண கோலத்துடனும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து 13 நாட்களுக்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அப்போது விவசாயிகள் தெரிவித்தனர்.