மாவட்ட செய்திகள்

காசநோய் கண்டறியும் முகாம் மாவட்டம் முழுவதும் 4-ந்தேதி வரை நடக்கிறது

சிவகங்கை மாவட்டம் முழுவதும் வருகிற 4-ந்தேதி வரை காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சார்பில் காசநோய் கண்டறியும் முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. முன்னதாக முகாம் தொடக்க விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. முகாமை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர் மலர்விழி கூறியதாவது:-

காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கிராமப்புற குடிசைப்பகுதி மற்றும் பஞ்சாலைகள், அகதிகள் முகாம் ஆகிய பகுதிகளில் உள்ள 39 ஆயிரத்து 978 மக்கள் தொகையை இலக்காக எடுத்து வருகிற 4-ந்தேதி(ஆகஸ்டு) வரை முகாம் நடைபெறுகிறது. 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு முகாம் நடைபெறும். இந்த குழுக்கள் வீடு, வீடாக சென்று சளி, இருமல் மற்றும் காசநோய் அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு உரிய பரிசோதனை மற்றும் முறையான சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த நடவடிக்கையின் மூலம் ஆரம்ப நிலையிலேயே காசநோய் கண்டறியவும், முறையான சிகிச்சை அளிக்கவும் அதன் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவுவதை தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, இணை இயக்குனர்(மருத்துவ நலப்பணிகள்) விஜயன் மதமடக்கி, துணை இயக்குனர்(காசநோய்) ராஜபிரகாஷ், துணை இயக்குனர்(குடும்ப நலம்) ராமபாண்டியன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நல அலுவலர் வாருணிதேவி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.