மாவட்ட செய்திகள்

ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு

ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரியில் 2 பெண்களிடம் 8 பவுன் நகை பறிக்கப்பட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி நக்கீரர் தெருவை சேர்ந்தவர் சரளாதேவி (வயது 57). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்கள் சரளாதேவி அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

ஊரப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (49). இவர் நேற்று முன்தினம் இரவு பிரியா நகர் மெயின்ரோடு பிள்ளையார்கோவில் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.