சமயபுரம், ஏப்.17-
மணப்பாறை அருகே உள்ள கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஜெயச்சந்திரன் (வயது 30). இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் நேற்று மணப்பாறையில் இருந்து பாடாலூருக்கு ஒரு சரக்கு ஆட்டோவில் ஜெனரேட்டர் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஜெயச்சந்திரன் மீது ஜெனரேட்டர் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் மற்றும் ஒருவர் பலத்த காயமடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.