பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிபுளி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் மண்டபம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர், ஆர்.வி.விசுவநாதன் தலைமை தாங்கினர். முன்னாள் கவுன்சிலர் சாத்தையா, என்மனங்கொண்டான் அப்துல்லா முன்னிலை வகித்தனர். உச்சிப்புளி ஊராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். புலவர் சித்திக், கார்மேகம், கண்ணன், துத்திவலசை சீனிவாசன், தர்காவலசை கிளை செயலாளர் குப்புசாமி, மீனவர் சங்க தலைவர் ஆண்டி, முன்னாள் கிராம தலைவர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அன்வர்ராஜா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
உச்சிப்புளி பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இங்கு நின்று செல்லும். ராமநாதபுரம், பரமக்குடி ரெயில் நிலையங்களிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமேசுவரத்தில் இருந்து அஜ்மிர் உள்பட அதிகமான இடங்களுக்கு ரெயில்கள் புதிதாக விடப்பட்டுள்ளன.
மீனவர்கள் நலன் குறித்தும் பாராளுமன்றத்தில் அதிகமாக பேசியுள்ளேன். இலங்கை அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை காப்பாற்ற தொடர் முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றிருக்கிறோம். தற்போது நடைபெற்று வரும் மாநில அரசு ஜெயலலிதா நமக்கு கொடுத்த அரசு. இந்த அரசு இன்று, நாளை போகும் என்று சொன்னார்கள். ஆனால் 2 ஆண்டுகளை கடந்து இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொங்கல் அன்பளிப்பாக ரூ.1000 வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஆட்சி தொடரவேண்டும்.
மண்டபம் யூனியன் என்மனங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவர்கள் வசிக்கக்கூடிய தர்கா வலசை பகுதிக்கு ரூ.24 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெறும். இதேபோல உச்சிப்புளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கலையரங்கம் கட்டித்தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி ரூ.5 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.