திண்டிவனம்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் வக்கீல் திலீபன், துணை செயலாளர் தனஞ்செழியன், செய்தி தொடர்பாளர் வக்கீல் எழில்மாறன், சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் வக்கீல் பூபால், செல்வ சீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் நகர செயலாளர் இமயன் வரவேற்றார்.
கூட்டத்தில், திராவிடர் கழக ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நீட் எதிர்ப்பு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை வலியுறுத்தி நாகர்கோவில் முதல் சென்னை வரையில் நடைபெற உள்ள பிரசார பயணம் வருகிற 11-ந் தேதி திண்டிவனத்திற்கு வரஉள்ளது. அன்றைய தினம் சிறப்பான வரவேற்பு அளித்து பொதுக்கூட்டத்தை நடத்துவது, அதில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் உரையாற்ற ஏற்பாடு செய்வது, வருகிற 11-ந் தேதி திண்டிவனத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருமாவளவனை பங்கேற்க வைப்பது, வருகிற 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர செயலாளர் எழிலரசன் நன்றி கூறினார்.