மாவட்ட செய்திகள்

கரூர் பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை அமைப்பு

கரூர் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது

கரூர்
கொரோனா பரவலில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்டிக் கடைகள், பழக் கடைகள், இறைச்சி கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தநிலையில் கடைகள் திறக்கப்படும் நேரம் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு பொருட்களை வாங்கி செல்லும் நிலை உள்ளது. அந்தவகையில் கரூர் உழவர் சந்தை மற்றும் ஜவகர் பஜாரில் உள்ள காமராஜ் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் காய்கறிகளை வாங்க பொதுமக்கள் அதிகளவு கூடுகிறார்கள். இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளை திருவள்ளுவர் மைதானம் மற்றும் கரூர் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி நேற்று முதல் கட்டமாக உழவர் சந்தையை ஒட்டிய பகுதி மற்றும் உழவர் சந்தை வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டு இருந்த 75-க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் கரூர் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. இதனால் நேற்று உழவர் சந்தையில் சற்று கூட்டம் குறைந்து காணப்பட்டது.