மாவட்ட செய்திகள்

79 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

தேனி மாவட்டத்தில் 79 ஊராட்சிகளில் வருகிற 2-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 9-ந்தேதி நடப்பதால் தேர்தல் நடக்கும் ஊராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அந்த வகையில் மொத்தம் 51 கிராம ஊராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அங்கு கிராமசபை கூட்டம் நடக்காது. மற்ற 79 ஊராட்சிகளில் மட்டும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடக்கிறது.

கிராமசபை கூட்டம் நடக்கும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்கும் முன்பு அனைவரின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கூட்டம் தொடங்கும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.