மாவட்ட செய்திகள்

இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி கிராமகோவில் பூசாரிகள் பேரவையினர் 89 பேர் கைது

இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் 89 பேரை போலீசார் கைது செய்தனர்.

மலைக்கோட்டை,

கிராம கோவில் பூசாரிகள் பேரவை

அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியம், நலவாரிய சலுகை பெறுவதற்கு வருட வருமான உச்சவரம்பை ரூ.72 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும், கோவில்களுக்கும், பூசாரிகளின் வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மெயின்கார்டுகேட் அருகே உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை கிராமகோவில் பூசாரிகள் பேரவை சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை போலீசாரின் தடையை மீறி மெயின்கார்டு கேட் அருகே மாவட்ட அமைப்பாளர் அலகரை பட்டாபி தலைமையில் திரண்ட கிராமகோவில் பூசாரிகள் பேரவையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். இதனை தொடர்ந்து அங்கு ஏற்கனவே பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் போராட்டம் நடத்திய 2 பெண்கள் உள்பட 89 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.