மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

கோடை மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்தது. இந்த மழை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், பெய்து வந்தது. குறிப்பாக கடந்த வாரம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பரப்பான செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி போன்ற பகுதிகளில் வறண்டு கிடந்த காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடியது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் வினாடிக்கு 1,380 கனஅடி வரை தண்ணீர் வந்தது. இந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு நின்றதால், அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது.

நீர்வரத்து குறைந்தது

நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,056 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 20.08 அடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடிக்கு கீழ் குறையுமானால் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கும்.