பென்னாகரம்:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆண்டுதோறும் காணும் பொங்கல் நாளில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து மெயின் அருவியில் குளித்தும், குடும்பத்துடன் பரிசலில் சென்றும் மகிழ்வர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காணும் பொங்கல் நாளில் நேற்று ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி களையிழந்து காணப்பட்டது. பரிசல்கள் காவிரி கரையோரம் கவிழ்த்து போடப்பட்டு இருந்தன. போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.