கோயம்பேடு,
சென்னை வடபழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், போலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் தவணை முறையில் விலை உயர்ந்த தொலைக்காட்சிகளை வாங்கிய நபர், அவற்றை சென்னை பர்மா பஜாரில் பாதி விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக வடபழனி போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து மோசடியில் ஈடுபட்டவரை பிடிக்க வியூகம் அமைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, ஊரப்பாக்கம், ஜோதிபுரத்தைச் சேர்ந்த அசோக் (வயது 34) என்பவரை கைது செய்தார். அசோக் எம்.பி.ஏ. படித்து உள்ளார். மேலும் இவர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 13 விலை உயர்ந்த தொலைக்காட்சிகளை வாங்கி இதுபோன்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அசோக்கை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.