மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக கூறி மின்வாரிய ஊழியர் ஏமாற்றியதாக புகார் பட்டதாரி பெண் உறவினருடன் போலீஸ் நிலையம் முற்றுகை

ஓமலூர், திருமணம் செய்வதாக கூறி மின்வாரிய ஊழியர் ஏமாற்றியதாக பட்டதாரி பெண் உறவினருடன் ஓமலூர் போலீஸ் நிலையம் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரமஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் குமரேசன் (வயது 27). ஓமலூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த 26 வயது பட்டதாரி பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அந்த பெண் தன்னுடைய உறவினர்களுடன் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தார். பின்னர் அவர்கள் திடீரென போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மனோன்மணி அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அந்த பெண் கூறியதாவது:

நான் கருப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்தேன். இதற்காக நான் தொளசம்பட்டியில் உள்ள என் பாட்டி வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தேன். அந்த சமயத்தில் எனக்கும் குமரேசனுக்கும் பஸ்சில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது.

இதையடுத்து நாங்கள் பல்வேறு வெளியூருக்கு சென்று வந்தோம். அந்த சமயங்களில் உன்னை நான் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதனிடையே கல்லூரி முடிந்த பின்பு எனது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். பின்னர் நாங்கள் போன் மூலம் தொடர்ந்து பேசி வந்தோம். ஆனால் அவருக்கு அடுத்த மாதம் கல்யாணம் நடைபெற இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இந்த தகவலை என்னிடம் குமரேசன் தெரிவிக்காமல் ஏமாற்றி விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சினேன். இருந்தபோதிலும் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுக்கவில்லை. எனவே என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய குமரேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டதுடன், அந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குமரேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.