ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கொம்மம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமன். ஊர்க்காவல் படை வீரர். இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 42). நேற்று மாலை அந்த பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த இடி, மின்னல் மழை பெய்தது. இதனால் பச்சையம்மாள் வீட்டின் வெளியே காயவைத்திருந்த துணிகளை எடுத்து கொண்டு இருந்தார். அப்போது அருகில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையில் இருந்த இரும்பு தகடு சூறை காற்றில் பறந்து வந்து பச்சையம்மாளின் தலை மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிங்காரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.