மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு

உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே கூவாடு கிராமத்தை சேர்ந்தவர் வள்ளிகந்தன். இவருடைய மனைவி அபிராமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வள்ளிகந்தன் அபிராமியை தாக்கியதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த அபிராமியின் சகோதரர்கள் 2 பேர் வள்ளிகந்தனிடம் சென்று தட்டிக்கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் அபிராமியின் சகோதரரான ஜானகிராமன் என்பவரை உளுந்தூர்பேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

தர்ணா போராட்டம்

இது பற்றி அறிந்த அபிராமி தனது 2 குழந்தைகளுடன் போலீஸ் நிலையம் வந்தார். பின்னர் அவர் போலீஸ் நிலையம் முன்பு உள்ள நடுரோட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது சகோதரர் ஜானகிராமனை உடனே போலீசார் விடுவிக்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.